ராமநாதபுரம் மண்டல அளவில் பள்ளிகளுக்கிடையிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
ராமநாதபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சிவகங்கை, தேவகோட்டை, பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 7 கல்வி மாவட்ட பள்ளிகளுக்கிடையிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் நடைபெற்றன.
இதில், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 14 வயதுக்குள்பட்டோர் பிரிவில் கே. அழகர் மற்றும் பி. சரண்சரத், 17 வயதுக்குள்பட்டோர் பிரிவில் ஜே. மாதவன் மற்றும் எஸ். ஹேமச்சந்திரன், 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் பி. சந்தோஷ் ஆகிய மாணவரும் முதலிடங்களைப் பிடித்து, மாநில அளவில் சேலத்தில் நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
வெற்றி பெற்று மாநில போட்டிக்குத் தேர்வாகியுள்ள இம்மாணவர்களையும் மற்றும் இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற மாணவர்களையும், அவர்களின் வெற்றிக்குத் துணையாயிருந்த உடற்கல்வி இயக்குநர் செளந்தரபாண்டியன் உள்ளிட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் அனைவரையும், அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைத் தலைவர் எம். சுதாகர், பள்ளிச்
செயலர் என்.வி. காசிமுருகன், பள்ளித் தலைவர் ஜே. ஜெயகணேசன் மற்றும் பள்ளி நிர்வாகக் குழுவினரும் , தலைமை ஆசிரியர் ஏ. ஆனந்தராஜன் ஆகியோரும் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.