விருதுநகரின் பிரதானச் சாலை மற்றும் தெருக்கள் சீரமைக்கப்பட்டதால், பாதாளச் சாக்கடை ஆளிறங்கும் தொட்டிகள் பள்ளமாக மாறியதுடன், அதன் மூடிகள் சேதமடைந்து வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் நகராட்சி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் ரூ. 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதில், சுமார் ரூ.10 கோடி வரை நகரில் உள்ள பிரதானச் சாலை மற்றும் தெருக்கள் சீரமைக்கப்பட்டன. அப்போது, சாலையின் உயரம் அதிகரிக்கப்பட்டதால், சாலையின் மையத்தில் ஆங்காங்கு பாதாளச் சாக்கடை ஆளிறங்கும் தொட்டிகள் பள்ளமாக மாறிவிட்டன. மேலும், அதன் மூடிகளும் ஆங்காங்கு உடைந்து சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, மழைக் காலங்களில் பாதாளச் சாக்கடை ஆளிறங்கும் தொட்டிகளிலிருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய் பரவுகிறது. மேலும், இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளமாக உள்ள ஆளிறங்கும் தொட்டி இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, சாலையின் உயரத்துக்கு ஏற்ப ஆளிறங்கும் தொட்டியை உயர்த்தி, அதில், புதிய மூடிகள் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.