குப்பையில் ஆரம்ப சுகாதார நிலைய மருந்துகள்: கர்ப்பிணிகள் அவதி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மறவர் பெருங்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கர்ப்பிணிகளுக்கான மருந்துகள் குப்பையில் வீசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மறவர் பெருங்குடி,வெள்ளையாபுரம்,மீனாட்சி புரம் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஆயிரத்து ஐநூறு குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு மறவர்பெருங்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மாதத்தின் பெரும்பான்மையான நாள்கள் பூட்டியே இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் சுற்றுப்பகுதி கிராமத்திலுள்ள கர்ப்பிணிகள் உரிய சிகிச்சைக்கு வழியின்றி சுமார் 16 கிலோ மீட்டர் தள்ளியுள்ள அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கோஅல்லது வேறு கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ செல்லவேண்டி இருக்கிறது. இதனால் அலைச்சல் காரணமாக கர்ப்பிணிகள் மனஉளைச்சலுக்கும் உடல் ரீதியான தொந்தரவுக்கும் ஆளாகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை மறவர்பெருங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு ஓடைப்பகுதியில் காலாவதியாகாத நிலையில் கர்ப்பிணிகளுக்கான அரசு முத்திரையிட்ட இரும்புச்சத்து டானிக் மற்றும் மருந்துகள் குப்பையில் வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
முறையாகச் செயல்படாத நிலையில் மருந்துப்பொருள்களை இப்படி வீணாக குப்பையில் கொட்டியதைக் கண்டு அப்பகுதியினர் வேதனையடைந்துள்ளனர். எனவே இப்பகுதி கிராம மக்களின் நலன் கருதி மறவர் பெருங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முறையாகச் செயல்படச் செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென மாவட்ட மருத்துவ நிர்வாகத்துக்குப் பொதுமக்கள் கோரிக்கை வைதத்துள்ளனர்.