சிவகாசிப் பகுதியில் கொடிக்காப்புளி பழம் வரத்து அதிகரித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வலதூர், வாதம்பட்டி, தாத்தாம்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 40 முதல் 50 ஏக்கர் வரை கொடிக்காப்புளி மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் விளையும் கொடிக்காப்புளி பழங்கள், விருதுநகர் மாவட்டமட்டுமில்லாது, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
இதுகுறித்து தாத்தம்பட்டி விவசாயி தங்கப்பாண்டி கூறியதாவது: போதிய மழை பெய்துள்ளதால் தற்போது கொடிக்காப்புளி பழம் வரத்து அதிகமாக உள்ளது. நான் 3 ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர் பாசனம் மூலம் கொடிக்காப்புளி மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறேன். தற்போது கிணற்றில் நீர் உள்ளது.
மேலும் சில்லறை விற்பனையில் கொடிக்காப்புளி பழம் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. பல வெளியூர்களிலிருந்து ஆர்டர்கள் வருவதால் விலை சற்று அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு மேலும் இருமாதங்களுக்கு கொடிக்காப்புளி பழம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அரசு தற்போது நூறுநாள் வேலைத் திட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வருகிறது. அவர்கள் புளிய மரகன்றுகளை நடவு செய்வதைப் போல, கொடிக்காப்புளி மரங்களையும் நட்டால் எதிர்காலத்தில் கொடிக்காப்புளி பழம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் என்றார்.