விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அதில், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் இளைஞர் எழுச்சி நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள், பொதுக்கூட்டம் நடத்த வேண்டும். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 5 ஆம் தேதி விருதுநகர் வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்கு கள ஆய்வு நடைபெற உள்ளது. இதில், ஊராட்சி திமுக செயலர், அணி அமைப்பாளர் நகர, வார்டு மற்றும் ஒன்றியச் செயலர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். மார்ச் 24, 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஈரோடு மண்டல மாநாட்டில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் (விருதுநகர்), எஸ்.தங்கப்பாண்டியன்(ராஜபாளையம்) உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.