ராஜபாளையம் அருகே கிணற்றை ஆழப்படுத்தும்போது மண் சரிந்து ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.
ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தர்ராஜபுரத்தில் பாலாராஜா என்பவரின் வயல் கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில் அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி (54), லட்சுமணன் மகன் தர்மர் உள்பட 9 பேர் ஈடுபட்டிருந்தனர். சனிக்கிழமை இப்பணியின்போது திடீரென மண் சரிந்து முத்துசாமி, தர்மர் ஆகியோர் மீது விழுந்தது.
இதில் முத்துசாமி மூச்சுத்திணறி அதே இடத்தில் உயிரிழந்தார். தர்மர் பலத்த காயமடைந்தார். சேத்தூர் புறக்காவல் நிலையப் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.