அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவிலாங்குளம் கிராமத்தில் வசிக்கும் ராமசாமிப்பிள்ளை மகன் ராமலிங்கம் (64). இவர் தனது வீட்டைப் பூட்டிவிட்டு பெங்களூருவிலுள்ள தனது மகன் வீட்டிற்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு குடும்பத்தாருடன் சென்றுவிட்டார்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடப்பது கண்டு, அக்கம்பக்கத்தினர் ராமலிங்கத்திற்கு தகவல் கொடுத்தனராம். மேலும் காவல்துறைக்கும் தகவல் தரப்பட்டது.
அருப்புக்கோட்டை தாலுகா காவல் குற்றப்பிரிவு ஆய்வாளர் லட்சுமணன், ராமலிங்கத்தின் வீட்டில் ஆய்வு செய்ததில் பீரோவின் கதவுகளும் உடைக்கப்பட்டுள்ளது கண்டு ராமலிங்கத்திடம் போன் மூலம் தொடர்பு கொண்டதில் 10 பவுன் நகைகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.