விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பட்டாசு தொழிலுக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, விருதுநகர் மாவட்டத்தின் வாழ்வாதாரமாக உள்ள பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரியும், சுற்றுச்சூழல் சட்டத்தில் இருந்து பட்டாசுத் தொழிலுக்கு விலக்கு அளிக்கவும், போராட்டத்தால் வேலை இழந்துள்ள பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
எனவே, பட்டாசு தொழிலைப் பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அடுத்தக் கட்டப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.