மாவட்ட அளவில் நடைபெற்ற மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில், ராஜபாளையம் ரிதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அண்மையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றன. இப்போட்டியில், ரிதம் சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், 50 மீட்டர் ஓட்டத்தில் கயல்விழி, 100 மீட்டர் ஓட்டத்தில் அமிர்தலட்சுமி, பந்து எறிதல் போட்டியில் நந்தகுமார், சௌமியா ஆகியோர் முதலிடத்தைப் பெற்றனர்.
நின்று நீளம் தாண்டுதல் பிரிவில், சின்னதம்பி, அமலா ஆகிய இருவரும் மாவட்ட அளவில் முதலிடத்தைப் பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மென்பந்து எறிதல் போட்டியில் மோகனேஸ்வரி, 50 மீ. ஓட்டத்தில் குருநாதன் ஆகியோர் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
இப் பள்ளி சார்பில் கலந்துகொண்ட மாணவர்களில் 6 பேர் முதலிடமும், 6 பேர் இரண்டாம் இடமும், 2 பேர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில், ரிதம் சாரிடபிள் டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி கதிரேசன், செயலர் பால்ராஜ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். ஆசிரியர் ஜீவா நன்றி கூறினார்.