சாத்தூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பிரதான சாலையில் பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், வங்கிகள் உள்ளன. ஆனால் இந்த சாலையில் ஏற்கெனவே ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. இதனால் அப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. மேலும் சாத்தூர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலால் பிரதான சாலையில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாத்தூர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து போலீஸாருக்கென ஒரு அறை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. எனவே சாத்தூர் பேருந்து நிலையம் முன் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிக அளவிலான போக்குவரத்து போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.