விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, குருசாமி, நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாள்களாக அதிகரிக்க வேண்டும்.
நாளொன்றுக்கு ரூ. 220 சம்பளம் வழங்க வேண்டும். 60 வயது நிரம்பிய விவசாய தொழிலாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதேபோல், தாதம்பட்டி- ஒண்டிப்புலி, விருதுநகர்-பாவாலி, இனாம்ரெட்டியபட்டி- ஓ. கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் இந்திய கம்யூ. மாவட்டக் குழு நிர்வாகி சீனிவாசன், நகரச் செயலாளர் காதர் முகைதீன் உள்ளிட்ட ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வரதராஜன் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட ஏஐடியுசி தலைவர் பி.எம்.ராமசாமி, முன்னாள் எம்.பி பொ.லிங்கம் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.
இச்சங்க நிர்வாகிகள் அமுல்ராஜ், பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ரவி, வீராச்சாமி, முத்துமாரி உள்பட திரளானவர்கள் பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.