ராஜபாளையம் அருகே உள்ள கலாங்காபேரி சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜபாளையம் பிஎஸ்கே நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் மொட்டமலை உள்ளது. சஞ்சீவ் மலையில் இருந்து இந்த ஊருக்கு சாலை செல்கிறது. ஊராட்சி மற்றும் நகராட்சி சார்பில் இந்த சாலை பராமரிக்கப்படுகிறது. நகராட்சிப் பகுதியான ஆர்.ஆர்.நகர் வடக்கு பகுதி முடிவடைந்ததும், ஸ்ரீவில்லிபுத்துர் யூனியனைச் சேர்ந்த கலங்காபேரி ஊராட்சி வருகிறது.
6 கி.மீ சாலையை மொத்தம் 3 ஊராட்சிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஊராட்சி சாலையை சீரமைக்கும்போது, மற்ற ஊராட்சிகள் சீரமைப்பதில்லை. இதனால் 6 கி.மீ., தூர சாலையில் சில இடங்களில் செப்பனிடும்போது, மற்ற பகுதிகள் சேதமடைந்து காணப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மேற்கண்ட 3 ஊராட்சி நிர்வாகமும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால், சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. தார்ச்சாலை மண் சாலையாக மாறியுள்ளது.
பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, 6 கி.மீ., தூரத்துக்கும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.