விருதுநகர்- ராஜபாளையம்-தென்காசி-கொல்லம் அகல ரயில் பாதைப் பணிகள்முழுவதும் முடிந்துள்ள நிலையில், இந்த வழித்தடத்தில் கொல்லத்துக்கு விரைவில் ரயிலை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகரிலிருந்து கொல்லம் வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதை முழுவதும், அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கடைசியாக பணிகள் நடந்த நியூஆரியங்காவு-இடமண் இடையேயான ரயில் வழித்தடத்தில் சோதனை ஓட்டமும் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்காதது, பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழித்தடத்தில், முன்பு இயக்கப்பட்ட சென்னை மெயில், நாகூர் மற்றும் கோவைக்கு ரயில்ளை இயக்கவும், இடமண் வரை இயங்கும் பாலக்காடு குருவாயூர் ரயில்களை, ராஜபாளையம் வழியாக மதுரைக்கு நீட்டிக்கவும் , கொல்லம்-மானாமதுரை வழியாக சென்னை, ராமேசுவரத்துக்கும் ரயில் இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.