கஜா புயல் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக தொடர் மழை பெய்தது. இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கஜா புயல் காரணமாக வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை இரவு வரை தொடர்ந்து மழை பெய்தது.
இதனால், பேருந்து நிலையம், பஜார் பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் மிக குறைவாக இருந்தது. மேலும், புயல் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. இத்தகவல் தெரியாத கிராமப்புற மாணவ, மாணவிகள் விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். மேலும், புயல் காரணமாக இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் மிக குறைவாகவே இருந்தது. மாவட்டம் முழுவதும் தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் இருந்தனர். இருப்பினும் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.