அருப்புக்கோட்டையிலுள்ள மதுரை காமராஜர் பல்கலையின் உறுப்புக் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை தேர்வு விடைத்தாள்கள் ஏற்றி வந்த வாகனம் சேற்றில் சிக்கியது. சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் வாகனம் மீட்கப்பட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியான அருப்புக்கோட்டை அரசுக் கல்லூரிக்கு வரும் நவம்பர் மாதம் பருவத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கு உரிய தேர்வு விடைத்தாள்களை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் மதுரைக் காமராஜர் பல்கலை கழகத்தின் வாகனம் ஒன்று வந்தது. ஏற்கெனவே இந்த அரசுக் கல்லூரிக்குச் செல்லும் மண்பாதை மழையால் சேறாகி பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்லூரிக்குச் செல்லும் மண்பாதையில் சென்ற பல்கலை. வாகனம் சேற்றில் சிக்கியது. அவ்வாகனத்தை வெளிக் கொண்டுவர கல்லூரி மாணவர்கள், அப்பகுதி மக்கள் சுமார் 3 மணி நேரம் போராடியும் மீட்க இயலவில்லை. அதன் பின்னர் பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாகனம் சேற்றிலிருந்து மீட்கப்பட்டது.
பிரதான சாலையிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்றித் தர வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தும், போராட்டம் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கல்லூரி மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே விரைவில் தார்ச்சாலை அமைத்தால்தான் எதிர்காலங்களில் இது போன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க முடியும் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.