காரியாபட்டியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேரு யுவகேந்திரா (விருதுநகர்) சார்பில் இளைஞர் மன்ற மேம்பாட்டு நிகழ்ச்சி காரியாபட்டியில் கடந்த 4 நாள்களாக நடைபெற்றது. இந்நிலையில், காரியாபட்டி மனு நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.
மனுநூல் நிலைய நிறுவனர் பரதன் முன்னிலை வகித்தார். அப்போது அவரது உருவப்படத்துக்கு நேருயுவ கேந்திரா துணை இயக்குனர் சடாச்சரவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கருத்துரையாளர்களாக பங்கேற்ற எஸ்பிஎம் அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி, சுரபி அறக்கட்டளை நிறுவனர் விக்டர், தேசிய சிறந்த இளைஞர் விருதாளர் விஜயராகவன், முதலமைச்சரின் மாநில சிறந்த இளைஞர் விருதாளர் உமையலிங்கம் ஆகியோர்பேசினர். முன்னதாக தேசிய சேவை தொண்டர் சொக்கப்பன் வரவேற்றார்.இதில் நேருயுவ கேந்திரா தேசிய சேவை தொண்டர்கள் மற்றும் அன்னை தெரசா மன்றத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.