விருதுநகரில் இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்கத்தொட்டியை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் வணிகர்கள் செவ்வாய்க்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விருதுநகர் 1 ஆவது வார்டுக்கு உள்பட்ட பாரதி நகர் முதல் தெருவில் பின்புறம், பூமாலை திட்டத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது.
இந்த தொட்டி அமைக்கப்பட்ட காலத்திலிருந்தே, அதில் குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு வழங்க வில்லையாம். மேலும், இத்தொட்டியால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இத்தொட்டியானது தற்போது சிமெண்ட் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை சுற்றி 50 குடியிருப்புகள் உள்ளன. மேலும், அதன் அருகே மருத்துவமனையும் உள்ளது. அதேபோல், தொட்டி உள்ள பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன.
எனவே, இந்த நீர்த்தேக்கத் தொட்டியால் விபத்து ஏற்படுவதற்கு முன்னர், அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி அலுவலகத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.
அதன் பின்னர், நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரிடம், பயன்பாடற்ற நீர்த் தேக்கத் தொட்டியை அகற்ற கோரி கோரிக்கை மனு அளித்தனர். அதற்கு அவர், தொட்டியைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.