திருவாரூர் அருகே நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் நிலத்தடி நீரை எடுக்கும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து பொது மக்கள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே சேந்தமங்கலத்தில் தனியார் குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு நாள்தோறும் 3,000 லிட்டர் நிலத்தடி நீர் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டை பயன்படுத்தி அந்நிறுவனம் நாள்தோறும் 30,000 லிட்டர் நிலத்தடிநீரை எடுப்பதாகவும், இதனால் நிலத்தடிநீர் வேகமாக குறைந்து குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் சேந்தமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் சேந்தமங்கலம் கடைவீதியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்தும், நிலத்தடிநீரை எடுக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்க வலியுறுத்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.