ஏப்.25-இல் நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஊராட்சி தூய்மைக் காவலர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சிகளின் தூய்மைக் காவலர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப் பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்.25-இல் நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பது, தூய்மைக் காவலர், பணித்தளப் பொறுப்பாளர் களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வழங்க வேண்டும், நாள் கூலி குறைந்தபட்சம் ரூ. 400 வழங்க வேண்டும், ஊதியத்தை நேரடியாகப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைப்பின் மாநில துணைத் தலைவர் ப. சண்முகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிஐடியூ மாநிலப் பொதுச் செயலர் வீ. குமார், செயலர் கே.ஆர். கணேசன், மாநிலத் தலைவர் நா. பாலசுப்பிரமணியன், சிஐடியூ மாவட்டச் செயலர் டி. முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.