தமிழ்நாடு கேரம் கழகம், திருவாரூர் மாவட்ட கேரம் கழகம் சார்பில், 12 மற்றும் 14 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான 59-ஆவது கேரம் விளையாட்டுப் போட்டிகள் திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஆக. 15) வரை 3 நாள்களுக்கு நடைபெறுகிறது.
முதல் நாள் போட்டியை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.
போட்டியில் சென்னை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, விழுப்புரம், சேலம், நீலகிரி, கோவை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். ஆடவர், மகளிர் என போட்டிகள் தனித் தனிப் பிரிவாக நடத்தப்படுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறும் 12 வீரர்கள் தேசியப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.
திருவாரூரில் முதல் முறையாக மாநில அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. ஒவ்வொரு போட்டியும் விடியோ பதிவு செய்யப்படுகிறது. முதல் சுற்றுப் போட்டியில் சென்னை, திருவாரூர், மதுரை வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர்.