மன்னார்குடியில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

திருவாரூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை மன்னார்குடியில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை மன்னார்குடியில் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் வ.சீ.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மதிமுக பொதுச் செயலர் வைகோ கலந்துகொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்:  விவசாயிகளின் பயிர்க் காப்பீட்டுக்கு பயனாளிகளைத் தேர்வு செய்வதில் அரசியல் பார்க்காமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். நீட் தேர்வுக்கு ஓராண்டுக்கு மட்டும் தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதை கண்டிப்பதுடன், கிராமப்புற, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவ,மாணவியர் பாதிக்கப்படுவதால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை காலம்தாழ்த்தாது உடனடியாக அமைத்திட மத்திய,மாநிலஅரசுகள் முன் வரவேண்டும். காவிரியின் குறுக்கே ராசிமணல், மேக்கேதாட்டு ஆகிய இடங்களில் புதியஅணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது.
விவசாயிகளின் பழைய கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன்களை உரிய காலத்தில் வழங்குவதுடன் விவசாயத்திற்கு தேவையான இடுபொருள்கள் தடையின்றி  கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி.  வரிவிதிப்பால் அத்தியாவசிய மருந்து பொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள், வர்த்தகர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவதை கவனத்தில் கொண்டு வரிவிதிப்பை முறைப்படுத்திட வேண்டும்.  வருகிற செப்.15-ஆம் தேதி, தஞ்சையில் மதிமுக சார்பில் நடைபெறவுள்ள அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டிற்கு,திருவாரூர் மாவட்டத்திலிருந்து அதிக எண்ணிக்கையில் கலந்துகொள்வது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 மாநில துணை பொதுச்செயலர் துரை.பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலர் பி.பாலச்சந்திரன், மாநில விவசாய அணி துணைச் செயலர் க.நடராஜன், கொள்கை விளக்க அணி துணைச்செயலர் ஆரூர் சீனிவாசன், மாநில இலக்கிய அணி துணைச் செயலர் பேரளம் ராவணன், தலைமைக் கழகப் பேச்சாளர் சோமநாதன், மாவட்ட பிரதிநிதி கோ.வி.மீனாட்சிசுந்தரம், நகர செயலர் சண்.சரவணன் ஆகியோர் பேசினர்.  கூட்டத்தில் ஒன்றியச் செயலர்கள்(கோட்டூர்)சிவா.கதிரவன், (நீடாமங்கலம்)என்.ராஜமாணிக்கம், (மன்னார்குடி)என்.என்.டி.பரமசிவம், நகர செயலர்கள் திருவாரூர் எஸ்.ஜெயராமன், திருத்துறைப்பூண்டி கோவி.சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com