முத்துப்பேட்டையில் பணிஓய்வு பெற்ற நூலகரிடம் ரூ. 24 ஆயிரம் மோசடி செய்த இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் (71). இவர், கடந்த 2-ஆம் தேதி தனது ஓய்வூதியப் பணத்தை எடுப்பதற்காக, முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். அப்போது, அங்கு நின்ற இளைஞரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து, ரகசிய எண்ணையும் கூறி ரூ. 24 ஆயிரம் பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். ஆனால், இந்த இளைஞர் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் இல்லையென கூறிவிட்டு, ரூ. 24 ஆயிரத்தை மோசடியாக எடுத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கண்ணையன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், எடையூர் சோத்திரியம் ராஜதுரை (35) இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ராஜதுரையை கைது செய்து, திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.