முத்துப்பேட்டை பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை மேற்கொண்ட சோதனையில் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் மற்றும் காலாவதியான குளிர் பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், ரங்கராஜன், செல்வக்குமார், குருசாமி, லோகநாதன், விஜயக்குமார், செந்தில்குமார் உள்ளிட்டோர் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இதில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், காலாவதியான உணவுப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், இப்பொருள்கள் பேரூராட்சி குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, பேரூராட்சி பணியாளர்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.