அருள்மிகு குருபகவான் கன்னிராசியிலிருந்து துலாம் ராசிக்கு வரும் செப்டம்பர் 2-ஆம்தேதி பிரவேசம் செய்கிறார். இதனை முன்னிட்டு அன்றைய தினம் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது.
குருபகவான் கன்னிராசியிலிருந்து துலாம் ராசிக்கு வரும் செப்டம்பர் மாதம் 2-இல் பிரவேசம் செய்கிறார். குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு முதல் கட்ட லட்சார்ச்சனை வரும் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி நிறைவடைகிறது.குருபெயர்ச்சிக்குப்பின் செப்டம்பர் 7-ஆ ம் தேதி இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை தொடங்கி செப்டம்பர் 14-ஆம்தேதி வரை நடைபெறவுள்ளது. லட்சார்ச்சனை காலை 9 மணிக்கு தொடங்கி பகல் 12 மணி வரையும் பின்னர் மாலை 4.30 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்கள் லட்சார்ச்சனையில் பங்கேற்கலாம். லட்சார்ச்சனை கட்டணம் ரூ. 400. லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படும். தபால் மூலம் லட்சார்ச்சனையில் பங்கேற்கும் பக்தர்கள் தங்களுடைய பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் மணியார்டர் அல்லது டிமாண்ட் டிராப்ட் எடுத்து திருக்கோயில் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
டிமாண்ட் டிராப்ட் எடுப்போர் உதவிஆணையர் / செயல்அலுவலர் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் அல்லது ஆலங்குடி சிட்டி யூனியன் வங்கியில் மாற்றத்தக்க வகையில் எடுத்து அனுப்பலாம்.
விழா ஏற்பாடுகளை அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பா.கலைச்செல்வி, அறநிலைய உதவி ஆணையர் மற்றும் கோயில் தக்கார் செ.சிவராம்குமார் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.