கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையைக் கண்டித்து திருவாரூரில் கட்செவி மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவ்வாறு போராடியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் காரணமாக கடந்த 15 நாள்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு மண்ணின் மைந்தர்கள் என்ற அமைப்பின் சார்பில் கட்செவி, முகநூல் நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.