திருவாரூர் அருகே திங்கள்கிழமை தென்னவராயநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் பயிர்க் காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி 10 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2016-17-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத்தொகை விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டு திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.488.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் தென்னவராயநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு உள்பட்ட குன்னியூர், கல்யாணசுந்தரபுரம், வேப்பத்தாங்குடி ஊராட்சியை சேர்ந்த ஓவிலிகுடி, மேலப்பாலையூர், கீழபாலையூர், மருவத்தூர், கழனிவாசல் உள்ளிட்ட 10 கிராம விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை அறிவிக்கப்படவில்லை.
இதையடுத்து திங்கள்கிழமை தென்னவராயநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு 3 ஊராட்சிகளை சேர்ந்த 300-க்கும் அதிகமான விவசாயிகள் 2016 - 17-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத்தொகை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அவர்கள் கூறியது: தங்கள் பகுதியில் 1,500 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள நிலையில் தென்னவராயநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 1000-க்கும் அதிகமான விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டியுள்ளனர்.
ஆனால் தற்போது பயிர்க் காப்பீட்டு தொகை இல்லை என்பது முறைகேடு நடைபெற்றிருக்கும் என சந்தேகம் எழுந்துள்ளது. விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.