திருவாரூர் அருகே மதுக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகேயுள்ள பெருங்குடியில் புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர்.
இதுதொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மதுக்கடை திறக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், பெருங்குடி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மாரியம்மன் கோயில் முன்பு, கோரிக்கையை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். தகவலறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில் உடன்பாடு ஏற்படாததால் இரவிலும் போராட்டம் தொடர்ந்தது.