மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதச் செயலைக் கண்டித்து ஜூலை 1-ஆம் தேதி மன்னார்குடியில் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர, ஒன்றியக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் எஸ். ராஜாங்கம் தலைமை வகித்தார். கட்சியின் ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி, நகரச் செயலர் வி. கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மத்திய அரசு 3 ஆண்டு கால ஆட்சியில், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், ஏழை எளிய மக்களுக்கும், விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை தீவிரமாக்கி வருகிறது. மாநில அரசு செயலற்று உள்ளது. மக்கள் பிரச்னைகளை பற்றி கவலைப்படாமல் பதவிகளை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள கவனம் செலுத்தி வருகிறது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடும் மக்கள் மீது கடும் அடக்குமுறை நடவடிக்கைகளையும், குண்டர் சட்டங்களையும் மாநில அரசு பயன்படுத்தி வருவதைக் கண்டித்து, இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஜூலை 1-ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் இரா. முத்தரசன் தலைமையில் மன்னார்குடி நகரம், ஒன்றிய பகுதிகளில் பிரசாரம் செய்வது, தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2016 -17 -ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கக் கோருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கட்சியின் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ், ஒன்றிய துணைச் செயலர் எஸ். ராகவன், மாவட்டக் குழு உறுப்பினர் பி. நாகேஷ், மாவட்ட மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை. அருள்ராஜன், வி.தொ.ச மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். மாரியப்பன், ஒன்றியச் செயலர் என். மகேந்திரன், மாதர் சங்க ஒன்றியச் செயலர் பி. பாஸ்கரவள்ளி, இளைஞர் மன்ற ஒன்றியச் செயலர் எஸ். பாப்பையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.