பணிநிரந்தரம் கோரி, திருவாரூரில் சிறப்பாசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்க மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமா பேசியது:
தமிழக அரசு 2012-ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை ஆகிய துறைகளில் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை நியமனம் செய்தது.
பணி நியமனம் முடிந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 2,000 ஊதிய உயர்வு வழங்கி ரூ. 7,000 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்பிறகு அறிவித்த 10 சதவீத ஊதிய உயர்வு 3 ஆண்டுகள் கடந்தும் வழங்கவில்லை.
இதையடுத்து, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வரும் என்று காத்திருந்தோம். ஆனால், எவ்வித அறிவிப்பும் வராததையடுத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இப்போராட்டம் நடைபெறுகிறது என்றார் அவர். ஆர்ப்பாட்டத்தில் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றியத் தலைவர்கள் சுசீலா (மன்னார்குடி), சிதம்பரம் (நீடாமங்கலம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.