வருங்கால தலைமுறையினரை பாதுகாக்க சமூகப் பார்வை மற்றும் சேவை மனப்பான்மையுடன் சீமைக் கருவேல மரங்களை அனைவரும் ஒருங்கிணைந்து அகற்ற வேண்டுமென்றார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
திருவாரூர் அருகே லட்சுமாங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகா மில் 122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மேலும் அவர் பேசியது:
சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவுப்படி திருவாரூர் மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தனியார் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. பொது மக்கள் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தண்ணீரை சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தி வருங்கால தலைமுறையினர் பயன்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் நிர்மல்ராஜ். முகாமில், 122 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.