காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நீடாமங்கலம் அருகேயுள்ள கோயில்வெண்ணியில் வியாழக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோயில்வெண்ணி ரயில் நிலையத்தில் எர்ணாகுளம் விரைவு ரயிலை விவசாயிகள் மறித்தனர்.
காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அன்பரசன் தலைமையிலும், தஞ்சை மணிமொழியன் முன்னிலையிலும் நடைபெற்ற இம்மறியல் போராட்டத்தில் மொத்தம் 50 பேர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நீடாமங்கலம் போலீஸார், 50 பேரையும் கைது செய்தனர்.
இம்மறியலால் ரயில் போக்குவரத்தில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.