திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் நான்கு வீதிகளில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மே 29-ஆம் தேதியும், அதற்கு முன்னதாக மே 28-ஆம் தேதி விநாயகர், சுப்பிரமணியர் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதற்காக தேர்க் கட்டும் பணி மற்றும் தேரோடும் வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேற்கு வீதி, வடக்கு வீதிகளில் உள்ள வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் மற்றும் சாலையோரங்களில் உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்பணிகளைப் பார்வையிட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி, கோயில் செயல் அலுவலர் பாரதிராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.