திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் ஆணையத்தின் தேசிய விநாடி - வினா 2017 புதன்கிழமை நடைபெற்றது.
இந்தியாவில் நடக்கும் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை மேலவை, ராஜ்யசபா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறை, உள்ளாட்சி, குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உள்ளிட்ட தேர்தல் நடைமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதுடன் விநாடி - வினா நிகழச்சிகளை நடத்தவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி, கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விநாடி - வினா நிகழ்ச்சியில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.எஸ். பாலு தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ஈ.ஏ.ஆர். அப்துல் முனாப் முன்னிலை வகித்தார்.
நடுவர்களாக சமூக அறிவியல் ஆசிரியர்கள் வ. இளங்கோவன், மா. ராஜா ஆகியோர் செயல்பட்டனர். இதில் பள்ளி அளவில் மாணவர்கள் வி. தேவேந்திரன் முதலிடமும், அ. பிரகாஷ் இரண்டாமிடமும், ஜெ. முகமது ஆசிப் மூன்றாமிடமும் பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் பா. ரகு வரவேற்றார். கு. நேரு நன்றி கூறினார்.