தமிழகத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகள் முறையாக நடைபெறவில்லை என, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டினார்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் பவித்திரமாணிக்கம், அன்னவாசல், மஞ்சக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும், கொரடாச்சேரி வட்டத்தில் பருத்தியூர், கண்கொடுத்தவனிதம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார். அப்போது, விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் குடிமராமத்து, தூர்வாரும் பணிகள் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே நடைபெற வேண்டும். மாறாக வடகிழக்கு பருவமழை தொடங்கிபின் தூர்வாரும் பணிகள் நடப்பதாக கூறுகின்றனர்.
கணக்கு காட்டுவதற்காகவே இந்த தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. முறையாக நடைபெறவில்லை. மழைநீரை சேமிப்பதற்கு திட்டம் தீட்டாததால் கடலில் கலந்துவிடுகிறது.
அதேபோல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை. அரசு தற்போது யார் எந்த அணியில் உள்ளனர் என்பதிலேயே கவனத்தை செலுத்துகிறது. பேரிடர் நிதியை தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து கேட்டுப்பெறவில்லை என்றார்.