திருவாரூரில் ஓடம்போக்கியாற்றின் கரையோரத்தில் மண்டியிருந்த புதர்களுக்கு பொதுப்பணித்துறை ஊழியர்கள் புதன்கிழமை வைத்த தீயில் கரையோர மரங்கள் பற்றி எரிந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி மேற்கொள்ள அக். 2-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதன் தொட ர்ச்சியாக விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான முதற்கட்ட பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, திருவாரூர் ஓடம்போக்கி ஆற்றில் மண்டியிருந்த புதர்களை தீயிட்டு அழிக்கும் பணியில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆற்றின் கரையோரத்தில் இருந்த மரங்களுக்கும் தீ பரவி எரியத் தொடங்கியது.
இதன்காரணமாக, திருவாரூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். இதுகுறித்த தகவலின்பேரில், திருவாரூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று மரங்களில் பற்றிய தீயை அணைத்தனர்.