திருவாரூர் தியாகராஜர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கோவூர் திருவாசகப் பேரவை சார்பில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கோவூர் திருவாசகப் பேரவை சார்பில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சமயக் குரவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசர். இவர்களில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி, கோவூர் திருவாசகப் பேரவை சார்பில் சிவாலயங்களில் நடைபெற்று வருகிறது. அதன்படி,  திருவாசகப் பேரவையைச் சேர்ந்த மாணிக்கவாசகம் உள்ளிட்ட 35 சிவனடியார்கள் தியாகராஜர் கோயில் தேவாசிரியன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்றோதல் செய்தனர். முன்னதாக, கோயில் தியாகராஜர் சன்னிதி முன்பு சிறிது நேரம் முற்றோதல் செய்தனர். இதில், திருவாசகத்தில் சிவபுராணம், கீர்த்தித் திருஅகவல், திரு அண்டப்பகுதி, போற்றித் திருஅகவல், திருச்சதகம் உள்ளிட்ட 51 பதிகங்களை (658 வரிகள்) ராகத்துடன் பாடினர். சுமார் 6 மணி நேரம் திருவாசக முற்றோதல் நடைபெற்றது.   திருவாசகத்தில் மாணிக்கவாசகர் திருவாரூரில் திருப்புலம்பல் என்ற பதிகத்தில் 3 பாடல்கள் 12 வரிகள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாசகம் முற்றோதல் குறித்து சிவனடியார் மாணிக்கவாசகம் கூறியது: கோவூர் திருவாசகப் பேரவை சார்பில் கடந்த 6 ஆண்டுகளாக சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் திருவாசகம் முற்றோதல் செய்து வருகிறோம். எங்கள் குழுவின் திருவாசக முற்றோதல் இறைப்பணி தொடரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com