திருவாரூரில் 3-வது நாளாக ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்தை தாற்காலிகமாக திரும்பப்பெற்று பணிக்குச் சென்றனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 7-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 7-ஆம் தேதி முதல் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதன்கிழமை முதல் ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து மதியம் 2 மணியளவில் தங்களது போராட்டத்தை நிறைவு செய்து கொண்டு உடனடியாகப் பணிக்குத் திரும்பினர்.