திருவாரூர் அருகே விவசாயி வீட்டில் வியாழக்கிழமை ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் 7 சவரன் தங்க நகைகள் திருட்டுப்போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருக்கண்ணமங்கை, மேலவீதியில் வசித்து வருபவர் விவசாயி மோகன் (52). இவர் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் தனது வயலுக்கு சென்றுள்ளார்.
மாலையில் இவர் வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.
வீட்டில் உள்ள பீரோவில் இருந்த ரூ.ஒரு லட்சம், 7 பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குடவாசல் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.