காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக வழக்குரைஞர் உள்ளிட்ட சிலர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலிவலம் காவல் நிலையத்தில், இளவரசநல்லூர் சதீஷ் என்பவர்அளித்த புகார் குறித்து, சார்பு ஆய்வாளர் மகாலெட்சுமியிடம் வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் உள்ளிட்டோர் நடவடிக்கை கோரி வலியுறுத்தியுள்ளனர். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பிறகு தாக்கி கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி, வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் ஆகிய இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு, சார்பு ஆய்வாளர் மகாலெட்சுமி திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து ஆலிவலம் போலீஸார் வழக்குரைஞர் சி.சுரேஷ்குமார் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நீதிமன்ற வளாகம் அருகில் சார்பு ஆய்வாளர் மகாலட்சுமி மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வழக்குரைஞர் சங்கத் தலைவர் ரஜினி தலைமையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.