கூத்தாநல்லூர் அருகே இருசக்கர வாகனம் மதகு கட்டையில் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
கூத்தாநல்லூர் வட்டம், ஆயக்குடி ஊராட்சி புதுக்குடியைச் சேர்ந்த ரவி மகன் கார்த்திகேயன் (14). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். மேலக்கண்ணுச்சாமிக்குடியைச் சேர்ந்த, நாகூரான் மகன் வினோத் (15). இவர்கள் இருவரும் , கொரடாச்சேரியிலிருந்து, லெட்சுமாங்குடிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தனர். வினோத் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தார்.
தோட்டச்சேரி பகுதியில் செல்லும்போது, நிலைதடுமாறிய இருசக்கர வாகனம், அருகேயுள்ள மதகு கட்டையில் மோதியது. இதில், காயமடைந்த கார்த்திகேயன் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். வினோத், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில், பூதமங்கலம், பண்டுதக்குடி, பாண்டுக்குடி, கூத்தாநல்லூர், தோட்டகச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனை முன்பு கூடி, மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால்தான் கார்த்திகேயன் இறந்து விட்டார் எனக் கூறி முற்றுகையிட்டனர்.
திருவாரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.
இந்த விபத்து குறித்து, கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.