திருவாரூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கால்நடைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து, அதற்கென பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. பொங்கல் வைத்து, மாடுகளை வரிசையாக கட்டி, வழிபட்டனர். சில இடங்களில் காளை மாடுகள் கோயில்களுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு வழிபாடு நடத்தப்பட்டது. இதேபோல், திங்கள்கிழமை மாலை கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், சிறுவர்கள் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி, ஆசி பெற்றனர்.