திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 98 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பயனாளிகளுக்கு வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றம், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 140 மனுக்கள் அளிக்கப்பட்டன.
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
பின்னர், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் ஈமச்சடங்கு நிதியுதவியாக 5 நபர்களுக்கு தலா ரூ.17 ஆயிரம் மதிப்பிலான காசோலையும், 1 நபருக்கு ரூ.6 ஆயிரம் மதிப்பில் இரண்டு சக்கர நாற்காலியும், நரிக்குறவர் நல வாரியம் சார்பில் சுய தொழில் தொடங்குவதற்கு 1 நபருக்கு ரூ.7 ஆயிரம் மதிப்பிலான காசோலையும் என மொத்தம் 7 நபர்களுக்கு ரூ.98 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குருமூர்த்தி, துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ரெங்கநாதன், துணை ஆட்சியர் (பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை) இருதயராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ரவீந்திரன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.