திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் ஜூலை 15-ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடுக்கு தங்களது பெயரை பதிவு செய்து கொண்டு, ஜூலை 31-ஆம் தேதிக்குள் பிரிமீயத் தொகையை செலுத்தி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாரத பிரதமரின் வேளாண் காப்பீடுத் திட்டம் காரீப் பருவம் 2018-ஆம் ஆண்டுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் நெல், உளுந்து, நிலக்கடலை ஆகியப் பயிர்களுக்கு வருவாய் கிராம அளவிலும், எள் பயிருக்கு பிர்கா அளவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் (2018-19)அக்ரிகல்சர் இன்சுரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, குறுவை நெல்லுக்கான காப்பீடுத்தொகை ஏக்கருக்கு ரூ. 29,500. இதற்கான பிரீமியத் தொகை ரூ. 590-ஐ ஜூலை 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால், ஜூலை 15-ஆம் தேதிக்குள் தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இறவை பாசன உளுந்துக்கான காப்பீடுத் தொகை ரூ.14,300. இதற்கான பிரீமியத் தொகை ரூ. 286, நிலக்கடலைக்கான காப்பீடுத் தொகை ரூ. 23,800, இதற்கான பிரீமியத் தொகை ரூ. 476, எள் பயிருக்கான காப்பீடுத் தொகை ரூ. 12,000, பிரீமியத் தொகை ரூ. 240, இவைகளை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். வாழைக்கான காப்பீட்டுத் தொகை ரூ. 58,750. பிரீமியத் தொகை ரூ.1,175, அக்டோபர் முதல் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
உரியக் காலக்கெடுவுக்குள் தங்கள் பகுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், வணிக வங்கி, அங்கீகரிக்கப்பட்ட அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிடெட் முகவர்களிடம் பயிர்களுக்கான பிரிமீயத் தொகையை, ஆதார் அட்டை மற்றும் உரிய ஆவணங்களுடன் விவசாயிகள் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மைத் துறை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.