திறந்த நிலையில் இருக்கும் குடிநீர்த் தொட்டி மூடப்படுமா ?
கூத்தாநல்லூர் நகராட்சியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்த நிலையில் இருக்கும் குடிநீர் குழாய்த் தொட்டியை மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கூத்தாநல்லூர் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோக்கும் வகையில் மேலகொண்டாழியில் 8 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து கூத்தாநல்லூர், கோரையாறு, மரக்கடை, ராஜகோபாலசுவாமி நகர், பாண்டுக்குடி, திருராமேஸ்வரம், பழையனூர், புனல்வாசல், வடபாதிமங்கலம், நாகங்குடி உள்ளிட்ட கிராமங்களுக்கு பூமிக்கடியில் குழாய் பதித்து அதன்மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. குடிநீர் விநியோகிக்க கூத்தாநல்லூர் பெரியக் கடைத்தெரு ரேடியோ பார்க் அருகேயுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாசலில் 10 அடி ஆழத்துக்கு பூமிக்கடியில் குழாய் புதைக்கப்பட்டுள்ளது. பள்ளி வாசலில் குழாய் செல்லும் பகுதியில் கட்டப்பட்டுள்ள குடிநீர்த் தொட்டி கடந்த பல மாதங்களாக உடைந்த நிலையில் திறந்து கிடக்கிறது.
திறந்து கிடக்கும் குடிநீர்த் தொட்டி உள்ள சாலையில் மாணவ, மாணவியர், குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் பலர் இத்தொட்டிக்குள் விழுந்து காயமடையும் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. எனவே, அசம்பாவித நிகழ்வுகள் நிகழும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு திறந்த நிலையில் உள்ள குடிநீர்த் தொட்டியை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.