திருவாரூரில் திருவிக அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ துறைக்குத் தனி பேராசிரியரை நியமிக்கக் கோரி, மாணவ, மாணவியர் தர்னா போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் பிபிஏ துறைக்குத் தலைவர் இல்லாததால் வணிகவியல் துறையின் தலைவர் பேராசிரியர் ராமு, கூடுதலாக பிபிஏ துறையை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் சான்றிதழ்கள் வாங்க செல்லும் மாணவியரிடம் தவறான நோக்கத்தில் பேசுவதாக கல்லூரி முதல்வரிடம் மாணவியர் புகார் தெரிவித்தனராம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பிபிஏ துறை மாணவியர் உள்பட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தவறான நோக்கத்தில் பேசும் பேராசிரியரைக் கண்டித்தும், பிபிஏ துறைக்குத் தனி பேராசிரியரை நியமிக்கக் கோரியும், கல்லூரி வளாகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவியர் கூறுகையில், தேர்வுக்காக கல்வி சான்றிதழ்கள் பெற சென்றால் பேராசிரியர் மாணவியரை தனித்தனியே வரச் சொல்வது மட்டுமன்றி உடைகள் குறித்தும், ஜாதி குறித்தும் தவறான நோக்கத்தில் பேசுவது வேதனையைத் தருகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பிபிஏ துறைக்கென தனி பேராசிரியரை நியமிக்க வேண்டும்
என்றனர்.