நீடாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய இரண்டு லாரிகளை வருவாய்த் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் மணல் கொள்ளை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் வருவாய்த் துறையினருக்கு புகார் தெரிவித்தனர். அதன்படி, நீடாமங்கலம் வட்டாட்சியர் குணசீலி தலைமையிலான வருவாய்த் துறையினர் புதன்கிழமை நீடாமங்கலம் - மன்னார்குடி சாலை ராயபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிய ஒரு லாரியையும், இதேபோல், நீடாமங்கலம் அருகே கற்கோயில் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய மற்றொரு லாரியையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஒரு வாரத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய 4 லாரிகள், ஒரு மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.