மாணவர்கள், இளம் பருவத்திலேயே தங்களை பொதுச் சேவையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுமென்றார் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி முதல்வர் பழ. கௌதமன்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தண்டலைச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழாவில் மேலும் அவர் பேசியது: நமது பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமை ஆண்டுதோறும் நடத்துவதன் நோக்கம் மாணவர்களிடையே சேவை மனப்பான்மையையும், மாணவர் பருவத்திலேயே பொது சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக கிராமங்களில் இதுபோன்ற சிறப்பு முகாமை கல்லூரி நிர்வாகம் நடத்தி வருகிறது. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக தேர்வுகளில் 6-ஆம் பருவத்தில் தாங்கள் ஆற்றிய சேவைகளுக்காக தொகுதி 5-இல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது என்றார் கௌதமன்.
விழாவில், ஊராட்சி முன்னாள் தலைவர் வி. மாதவன், தமிழ்த்துறை விரிவுரையாளர் கு. கண்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கு. திலகர், தமிழ்த்துறை விரிவுரையாளர்கள் நா. பன்னீர்செல்வம், நா. ராஜமாணிக்கம், வணிகவியல் துறைத் தலைவர் வெ. தணிகைராஜன், வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் பி. ஓம்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.