திருவாரூரை அடுத்த விளமல் பகுதியில், கஜா புயலால் பல்வேறு மரங்கள் முறிந்து விழுந்தபோதிலும், பனை மரங்கள் கம்பீரமாக காட்சி தருகின்றன.
நாகை அருகே வியாழக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கரையைக் கடந்த கஜா புயல், போகிற போக்கில் மரங்களைச் சாய்த்து விட்டு சென்றுள்ளது. பசுமை கொஞ்சி விளையாடிய மரங்கள், உயிரற்ற சடலங்களாக வேரோடு பிடுங்கப்பட்டு, சடலங்களைப் போல கிடக்கின்றன. லட்சக்கணக்கான மரங்கள் சேதமாகியிருக்கலாம் என கணக்கிடப்படும் வேளையில், திருவாரூர் அருகே விளமல் பகுதியில் தஞ்சை- நாகை தேசிய நெடுஞ்சாலையில் வரிசை கட்டி நிற்கும் பனை மரங்கள் எவ்வித சேதாரமுமின்றி காட்சியளிக்கின்றன.
பல்வேறு உணவுப் பொருள்களையும், பலருக்கு வேலைவாய்ப்பையும் வழங்குவது பனை மரங்கள். பனை மரங்கள் வளரும் இடத்தில் மண் அரிப்பு தடுக்கப்படுவதோடு, மண் சரிவும் தடுக்கப்படுகிறது. பல்வேறு பயன்கள் நிறைந்த பனை மரத்தை வளர்க்க வேண்டும் என்று அண்மைக் காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அத்துடன், பனை விதைகளை சேகரித்து ஆறு, வாய்க்கால் ஓரங்களில் விதைக்கும் பணிகளையும் அந்த அமைப்புகள் செய்து வருகின்றன.
இந்த நிலையில், கஜா புயலின் சீற்றத்தை தன்னுள் வாங்கிக் கொண்டு, எவ்வித சலனமும் இன்றி, விளமல் பகுதியில் உள்ள பனை மரங்கள் காட்சி தருகின்றன.