மணிப்பூர் மாநில முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகன், தெற்கு தில்லியின் ஹெளஸ் காஸ் பகுதியில் உள்ள உணவகத்தின் 2-ஆவது மாடியில் இருந்து மர்மமான முறையில் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மணிப்பூர் மாநில கல்வித் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஒகந்த்ருவின் மகன் சித்தார்த் (19). இவர், தெற்கு தில்லியின் ஹெளஸ் காஸ் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றின் மாடியில் இருந்து சனிக்கிழமை மாலையில் மர்மமான முறையில் கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.
சித்தார்த்தின் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது சகோதரி புகார் அளித்துள்ளார். அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அந்த அதிகாரி.