ஆனந்த் விஹார் பகுதியில் வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி சகோதரர் இருவர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் இருந்த அவர்களது தந்தையும், அவர்களை மீட்கச் சென்ற தீயணைப்பு வீரரும் விஷவாயுவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
லாஜ்பத் நகரில் சாக்கடையை சுத்தம் செய்த இருவர் கடந்த வாரம் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது மீண்டும் அதோபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறை இணை ஆணையர் (ஷாத்ரா) நுபுர் பிரசாத் கூறியதாவதுச
ஆனந்த் விஹார் பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற தந்தை யூசுப் (50), அவரது மகன்கள் ஜஹாங்கீர் (24), இஜாஸ் (22) ஆகியோர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதையடுத்து, தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர் மஹிபால், அந்த கழிவுநீர் தொட்டி அருகே சென்றுள்ளார். அப்போது அவரும் விஷவாயுவால் பாதிக்கப்பட்டார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில், சகோதரர்கள் ஜஹாங்கீர், இஜாஸ் ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீயணைப்பு படை வீரர் மஹிபால், தந்தை யூசுப் ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.